வித்தியாசமான முறையில் எருமை மாட்டின் உரிமையாளரை கண்டுபிடித்த உ.பி. போலீஸார்!!

காணாமால் போன எருமைக்கு உரிமைக்கோரிய இரு உரிமையாளருக்கு வித்தியாசமான முறையில் போலீசார் நீதி வழங்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் விவாதமாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கண்ணாஜ் மாவட்டத்தின் திருவா கோட்வாலி அடுத்த அலினகரில் வசிக்கும் தர்மேந்திரா என்பவரின் எருமை ஒன்று மூன்று நாட்களுக்கு முன்பு மாயமானது. அதேபோல், அதேபகுதியைச் சேர்ந்த வீரேந்திர திர்வா என்பவரின் எருமையும் 3 நாட்களுக்கு முன்பு மாயமானது.
இருவரும், கோட்வாலி போலீசில் தங்களது எருமை திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு எருமையை அவர்கள் மீட்டனர். பின்னர், எருமை மீட்கப்பட்ட விஷயத்தை தர்மேந்திரா மற்றும் வீரேந்திர திர்வா ஆகியோருக்கு தெரிவித்தனர். அவர்கள் கோட்வாலி காவல்நிலையம் வந்தனர்.
இருவரும் மீட்கப்பட்ட ஒரு எருமையை பார்த்து, ‘இதுதான் எனது எருமை’ எனக்கூறி ஒரு எருமைக்கு இருவரும் உரிமை கோரினர். அதிர்ச்சியடைந்த போலீசார், யாருடன் எருமையை அனுப்பி வைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இருவரும் ஒரு எருமைக்கு உரிமை கோருவதால், உண்மையான உரிமையாளரை அடையாளம் காண எருமைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
Justice UP police style – let the buffalo identify its real owner.(Though not quite related, reminded of@sepoy's "I am a bhains!" somehow…)pic.twitter.com/PRUf0vUR19
— Sundeep Dougal (@SundeepDougal) October 12, 2020
இதற்காக, இரு உரிமையாளரையும் அமர வைத்து எருமையிடம் பழக விட்டனர். அந்த எருமையானது வீரேந்திர திர்வா என்பவருடன் நெருக்கமாக பழகியதால், அவருடன் போலீசார் எருமையை அனுப்பி வைத்தனர். போலீசார் எருமைக்கு நீதி வழங்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.