கொரோனா பாதிப்பு உச்ச கட்டத்தில் உள்ளபோது நீட் தேர்வை ஒத்திவைக்க மறுப்பது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி!

ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. அன்று நீட் தேர்வை ஒத்திவைத்த மத்திய அரசு இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரமாக உச்சகட்ட நிலையிருக்கிறபோது ஒத்திவைக்க மறுப்பது ஏன்? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கையில்,’உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியிருக்கிறது. 59 ஆயிரத்து 449 பேர் இறந்திருக்கிறார்கள். 156 நாட்களாக பொது ஊரடங்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை செப்டம்பர் 13-ம் தேதியும், தேசிய அளவில் முதன்மை நிலையில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான ஜெஇஇ நுழைவுத் தேர்வை செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும் நடத்த, மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதவுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் குறைவாகும். இதற்குக் காரணம் நீட் தேர்வுகள் சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, பாடத் திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதால் மாநிலப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் பயிலுகிற தமிழக மாணவர்களால் வெற்றி பெற முடியாமல் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

தேர்வில் மொத்தம் 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க வேண்டியுள்ளது. இவர்களுடைய பெற்றோர்களும் சேர்ந்து வந்தால் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தேர்வு மையங்களுக்கு வருகிற சூழ்நிலை ஏற்படும். இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று கடுமையாக பரவக் கூடிய அபாயம் உள்ளது. இதில், மாணவர்களின் உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? மத்திய அரசா, மாநில அரசா?

பொது ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்றினால், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்துவதாக இருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து ஜூலையில் நடத்துவதாக இருந்ததும் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 22 ஆயிரமாக இருந்தது. அன்று நீட் தேர்வை ஒத்திவைத்த மத்திய அரசு இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரமாக உச்சகட்ட நிலையிருக்கிறபோது, ஏன் ஒத்திவைக்க மறுக்கிறது? நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கொரோனாவின் எண்ணிக்கை 15 லட்சம் கூடியிருக்கிறது என்பது மத்திய அரசிற்கு தெரியாத உண்மையா?

நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 7 மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டத்தில், ”நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டுமென” பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிர பரிசீலனை செய்ய வேண்டும். இதில் வீண் பிடிவாதம் காட்டக்கூடாது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை விட உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

எனவே, கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவுகிற பதற்றமான சூழலின் அடிப்படையில், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை உடனடியாகத் தள்ளிவைக்க வேண்டும். இதற்கு மாற்றாக மருத்துவ, பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கையை முடிவு செய்ய வேண்டுமென்று மத்திய பாஜக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x