தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடை

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில், அடிக்கடி ஏற்படும் மின் தடையால், பொது மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழக ஊரடங்கால், மின் தேவை குறைந்துள்ளது. அதேபோல், மின் உற்பத்தியும் பாதிக்கப்படவில்லை. எனினும், சென்னையில், திருவொற்றியூர், எண்ணுார், குரோம்பேட்டை, வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும், காலை, இரவில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமின்றி, வீடுகளில் இருந்தபடி, அலுவலக வேலை செய்வோரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ எனப்படும், இணையதளம் வாயிலாக, பாடங்கள் நடத்துகின்றனர்.
அதற்கு, அதிவேக இணைய சேவை தேவைப்படுவதால், வீடுகளில், ‘வைபை’ வசதி செய்யப்பட்டு உள்ளது. தடையில்லாமல் மின்சாரம் இருந்தால் மட்டுமே, இணைய சேவையும் தடையின்றி கிடைக்கும். காலை முதல் மதியம் வரை, இணைய வகுப்புகள் நடக்கின்றன. அந்த சமயங்களில், மின் தடை ஏற்படுவதால் வகுப்புகள் பாதிக்கின்றன.” என்று தெரிவித்துள்ளனர்.
“திடீரென பெய்த மழையால், பல இடங்களில், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டது; இதுவே, மின் தடைக்கு காரணம். பழுது ஏற்பட்டால், விரைந்து சரிசெய்து, மின்சாரம் வழங்கப்படுகிறது” என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.