ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி: நேபாள பிரதமர் குற்றச்சாட்டு

இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக நேபாள பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், சமீப காலமாக மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை நேபாளம் தனக்கு சொந்தமானது என்று கூறி வருகிறது. அந்த பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தையும், நேபாள அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி குற்றம்சாட்டி உள்ளார்.
காட்மாண்டுவில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கேபி சர்மா, ‘‘இந்திய தூதரகம் தனக்கு எதிராக செயல்படுவதாகவும், காட்மாண்டுவில் பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும்’’ தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு சீனாவின் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்தே நேபாளம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.