பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியானது. இதில் 97.12 சதவீதத்தினர் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து, 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று திடீரென வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 92.3 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவியர் 94.8 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி விகிதம் 5.39 சதவீதம் அதிகமாகும்.
தமிழகத்தில் உள்ள 7,127 மேல்நிலைப்பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்தது. 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே ஈரோடு (96.99 சதவீதம்), கோவை (96.39 சதவீதம்) உள்ளது
முக்கிய பாடங்களின் தேர்ச்சி விகிதம்
- இயற்பியல் – 95.94 சதவீதம்
- வேதியியல் – 95.82 சதவீதம்
- உயிரியல் – 96.14 சதவீதம்
- கணிதம் – 96.31 சதவீதம்
- தாவரவியல் – 93.95 சதவீதம்
- விலங்கியல் – 92.97 சதவீதம்
- கணினி அறிவியல் – 99.51 சதவீதம்