ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்த 3 நீதிபதிகள் பணி நீக்கம்!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கிய பிகாரைச் சேர்ந்த 3 நீதிபதிகள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பொது நிர்வாகத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
நேபாள நாட்டில் விராட்நகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின்போது அந்த ஹோட்டலில் பெண்களுடன் தங்கியிருந்த மூன்று பேர் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் பிகார் மாநிலம், சமஸ்திபூர் குடும்ப நீதிமன்ற முதன்மை நீதிபதி ஹரி நிவாஸ் குப்தா, அராரியா மாவட்ட கூடுதல் நீதிபதிகள் ஜிதேந்திரநாத் சிங், கோமல் ராம் என்பது தெரிந்தது.
நேபாள செய்தித்தாளில் இது குறித்த செய்தி வெளியானபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து பாட்னா உயர்நீதிமன்றம் மூவரிடமும் விசாரணையைத் தொடங்கியது. அதில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மூவரையும் பணியில் இருந்து நீக்கப் பரிந்துரைத்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இவர்கள் மூவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் பிகார் மாநில பொது நிர்வாகத் துறை திங்கள்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், நீதிபதிகள் ஹரி நிவாஸ் குப்தா, ஜிதேந்திரநாத் சிங், கோமல் ராம் ஆகிய மூன்று பேரும் 2014 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், ஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகளையும் அவர்கள் இழக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.