“குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்!” ஜே.பி. நட்டா பேச்சு

கொரோனா தொற்று காரணமாக தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார்.
மேற்கு வங்கம் மாநிலம் வடக்குப் பிராந்தியப் பகுதியில் சமூக அமைப்புகளுடனானக் கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில், “சொந்தக் கட்சியின் நலனுக்காக மம்தா பானர்ஜியின் மேற்கு வங்க அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால், பாஜக அனைவரது வளர்ச்சிக்காகப் பணியாற்றுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பலன்களை அனைவரும் பெறுவீர்கள். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. நாங்கள் அதில் உறுதி பூண்டுள்ளோம்.
கொரோனா தொற்றால் அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மெதுவாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. விதிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். வரும் 2021 பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.