இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கு ஒரு மாதம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது..

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ஆண்டுதோறும், ஜூலைக்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஆக., 1ல் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்னையால், அக்., 1 முதல், மாணவர் சேர்க்கை துவங்கியது. வரும், 31க்குள் மாணவர் சேர்க்கையை முடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.அதன்படி, நவம்பர், 30 வரை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். டிசம்பர், 1க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும் என, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அண்ணா பல்கலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, மற்ற மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு ஆகஸ்ட், 12 முதல், ஆன்லைனில் வகுப்புகள் துவங்கப்பட்டன. இம்மாதம், 26க்குள் பாடங்களை முடித்து, நவ., 2 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நவ., 13 வரை வகுப்புகளை நடத்தலாம்; நவ., 19 முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
ஊரடங்கால், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியே அண்ணா பல்கலை தேர்வு நடத்தியது. இந்த தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், சில மாணவர்கள் காப்பியடித்து தேர்வை எழுதியது, கேமரா காட்சிகளில் பதிவானது.இதையடுத்து, அந்த மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அவர்களின் ஆன்லைன் வழி தேர்வு காட்சிகளை ஆய்வு செய்து, காப்பியடித்தவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிக்க, பல்கலை முடிவு செய்துள்ளது.