“தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, இணையவழி வினாடி வினா போட்டி” – சத்யபிரதா சாஹு

தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேர்தல் கமிஷன் சார்பில், வரும், 25ம் தேதி முதல், இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை தேர்தலில், பொது மக்கள் பங்கேற்பை அதிகரிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில அளவில், இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியின் அனைத்து சுற்றுகளும், ‘goal Quiz sports’ என்ற, ‘யு டியூப்’ இணையவழி தளத்தில் நடத்தப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக, முதல் நிலை போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல் நிலை போட்டி, மூன்று சுற்றுக்கள் உடையது. முதல் சுற்று, 25ம் தேதி மாலை, 4:00 மணி; இரண்டாம் சுற்று, 26 காலை, 11:00 மணி; மூன்றாம் சுற்று, அன்று மாலை, 4:00 மணிக்கு நடத்தப்படும். இணையதளத்தில், கருத்துக்களை தெரிவிக்கும் பகுதியில், சரியான பதில்களை முதலில் பதிவிடும் நபரே, அடுத்த சுற்றுகளில் பங்கேற்க தகுதியானவர்.
ஒரு நபர் ஒரு முறை மட்டுமே, பதிலை பதிவிட வேண்டும். மொத்தம், 36 குழுக்கள், அரையிறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுகள் குறித்த அறிவிப்பு, போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து போட்டிகள் நடக்கும். ஒரு அணி அதிகபட்சம், இரண்டு நபர்களை கொண்டதாக இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்க அனுமதி இலவசம். முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். முதல்நிலை மற்றும் அரையிறுதி போட்டிகளில், சரியான பதில் அளிப்போருக்கு, ஆறுதல் பரிசு வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.