காஷ்மீர் புதிய ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரிஷ் சந்திர முர்மு, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பினார்.
இந்நிலையில், கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரின் இரண்டாவது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள 61 வயதான மனோஜ் சின்ஹா, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். காசியாப்பூர் மக்களவை தொகுதியில், பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட இவர், மூன்று முறை எம்.பி.,யாகவும், ரயில்வே மற்றும் தொழில்நுட்பத் துறையில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.