பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் டைனாசோர் முட்டைகளா…?

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உயிரின படிமங்களை ஆய்வு செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியில் மண் எடுக்க தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அடுத்தடுத்து தோண்டும் போது டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது. பல்வேறு அளவுகளில் கிடைத்த அவைகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தனித்துவமான கார்னோட்டாரஸ் டைனோசர்கள் தென் அமெரிக்க கண்டத்தில் சுற்றித் திரிந்தன. மேலும் சில அசாதாரண உடல் குணங்கள் இருந்தபோதிலும், அவை மிகவும் ஆதிக்கம் செலுத்தி வேட்டையாடுபவைகளாக இருந்தன என ஆய்வுகள் கூறுகின்றன.
அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில், எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் மற்றும் கல் மரத்துண்டுகள் காணப்படுகின்றன. இவைகள் அனைத்தும் கிரிடேசியஸ் காலத்து மரமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.