பீகார் தேர்தலில் களமிறங்கிய கோடீஸ்வர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு; (ஏடிஆர்) அமைப்பு அறிக்கை!!

மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆர்ஜேடி வேட்பாளர் 68 கோடி ரூபாய் சொத்து மதிப்பை காட்டி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் வரும் 28 ம் தேதி துவங்கி மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் களமிறங்கி உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்னும் அமைப்பு ஆய்வு நடத்தியது.
முதல்கட்ட தேர்தலில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சி சார்பில் 41 பேரில் 39, ஐக்கிய ஜனதா கட்சியில் 35 பேரில் 31, பா.ஜ.,வில் 29 பேரில் 24, எல்.ஜே.பி.,யில் 41 பேரில் 30 பேர், பகுஜன் சாமாஜ் கட்சியில் 26 பேரில் 12 பேரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும் பாலானோர் சுமார் ரூ.1 கோடி அளவிற்கு சொத்து மதிப்பு கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் மொகாமா தொகுதி வேட்பாளரான லாலு கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த அனந்தகுமார் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.68 கோடி என காண்பித்துள்ளார். முதற்கட்ட வேட்பாளர்களிலேயே இவர் தான் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்.
இவருக்கு அடுத்த படியாக ஷேகுபுரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் கஜானந்த் ஷாகி என்பவர் ரூ.61 கோடி சொத்து மதிப்பை காண்பித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
கயா தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனோர்மா தேவி ரூ.50 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
இதுமட்டுமல்லாது 5 வேட்பாளர்கள் தங்களின் சொத்து பூஜ்யம் நிலையில் அதாவது சொத்துக்களே இல்லை என தெரிவித்துள்ளனர்.