கிணற்று குடிநீர் வினியோகம் பாதிப்பு.. சடலமாக கிடந்த சிறுத்தை!! என்ன நடந்தது??

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கக்குச்சி கிராமத்தில் குடிநீருக்குப் பயன்படுத்தும் கிணற்றில் விழுந்திருந்த சிறுத்தை இரண்டு நாள்களுக்குப் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சிப் பகுதியினை சுற்றிலும் வனப் பகுதிகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்குக் குடிநீர் வினியோகம் இல்லாமல் இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள கிணற்றின் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்பதற்காக இப்பகுதி கிராம மக்கள் நேற்று இப்பகுதிக்குச் சென்று கிணற்றைப் பார்த்துள்ளனர். அப்பொழுது திறந்த நிலையிலிருந்த கிணற்றில் சிறுத்தை விழுந்துள்ளதும், தப்பிப்பதற்கு மின்மோட்டாரின் ஒயர்களை கடித்துள்ளதும் தெரிய வந்தது.
இதனால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. பின்னர் இறந்து கிடந்த சிறுத்தை குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தைக் கிணற்றில் இருந்து மீட்டனர், பிரேதப் பரிசோதனைக்குப் பின் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.