“திருமாவளவன் பேசியது எப்படி குற்றம் ஆகும்?” காவல்துறைக்கு ப.சிதம்பரம் கேள்வி!!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு தனியாா் யு-டியூப் சேனல் சாா்பாக ஒரு மாதத்துக்கு முன்பு இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் பங்கேற்று மனுதர்மம் குறித்து பேசியது சர்ச்சையானது.
இந்நிலையில் எம்.பி திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக இந்து இயக்கத்தினரும், பாரதிய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. இதனைத் தொடர்ந்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சுட்டுரையில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், “தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு.திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவுபடுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?” என தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.