கோட்சே பயங்கரவாதி அல்ல தேசபக்தர்..? மன்னிப்பு கோரியதை மறந்த பிரக்யா பேச்சு..

‘கோட்சே பயங்கரவாதி அல்ல தேசபக்தர்’ பிரக்யாசிங் தாகூர் எம்.பி. பேச்சு
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக்விஜய் சிங் கோட்சேவை பயங்கரவாதி என விமர்சித்ததற்கு பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் தேசபக்தர்களை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவதாக பதில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங் கோட்சே நூலகம் திறக்கப்பட்டதை விமர்சித்து சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி கோட்சே எனத் தெரிவித்திருந்தார் .
இதற்கு பதிலளித்தப் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா தாகூர், “கோட்சேவை பயங்கரவாதி என கூறுவதன் மூலம் காங்கிரஸ் தேசபக்தர்கள் மீது தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருகிறது” எனத் தெரிவித்தார்.
பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற விவாதத்தில் கோட்சேவை தேசபக்தர் எனக் குறிப்பிட்டுப் பேசிய பிரக்யா பின்னர் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.