மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.. 200 க்கும் மேற்பட்டோர் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் சுரேஷ் தலைமை வகித்தார். போராட்டத்தில் தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாத பராமரிப்புத் தொகை ரூ. 3 ஆயிரம் வழங்குவது போல், தமிழகத்திலும் வழங்கக் கோரியும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உயர்த்தி வழங்கிடு, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ன் படி தனியார் துறைகளிலும் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதில் வட்ட செயலாளர் அண்ணாமலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் குப்புசாமி கோவிந்தசாமி , எத்திராஜ், மகாலிங்கம் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை ஊத்தங்கரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.