வேண்டுதல் நிறைவேற்றம்.,சாமிக்கு தன் உயிரை காணிக்கையாக செலுத்திய கொடூரம்!!!

நாகர்கோவில்:
வேண்டிக்கொண்டபடி வேலை கிடைத்ததால் தனது உயிரை சொன்னபடி சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட வங்கி அதிகாரியால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே எள்ளுவிளை பத்தன்காடை சேர்ந்தவர் செல்ல சுவாமி. இவரது மகன் நவீன் (32). நவீன் படித்து விட்டு வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்துள்ளார். வேலை கிடைத்தால், சாமியிடம் வந்து விடுவேன் என வேண்டுகோளை வைத்துள்ளார். இந்நிலையில் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்று மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் உதவி மேலாளராக பணி கிடைத்தது. கடந்த 15 நாட்கள் முன்பு நவீன் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனக்கு வேலை கிடைத்ததால், வேண்டியபடி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று அதிகாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த நவீன், காலை நாகர்கோவில் வந்துள்ளார். பின்னர் சாமிக்கு வேண்டியபடி தனது உடலை காணிக்கையாக தருவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு புத்தேரியில் ரயில்வே பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் தலை துண்டிக்கப்பட்டு இறந்து போனார். இதுபற்றி நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைத்ததற்காக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.