தன் வளர்ப்பு நாய்க்கு, பத்திரிக்கை அடித்து வளைகாப்பு நடத்திய உரிமையாளர்..

தஞ்சையில், சொந்த மகளுக்கு வளைகாப்பு செய்வது போல் செல்லப் பிராணியான நாய்க்கு உரிமையாளரான முதியவர் வினோதமாக வளைகாப்பு நடத்தியதை கண்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.
தஞ்சை தென்றல் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பல ஆண்டுகளாக செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார். அத்துடன் அபிராமி என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார். தற்போது அந்நாய் சினையாக உள்ளது. அதன் மீது கண்மூடித்தனமான பிரியத்தால் தங்கள் மகளுக்கு நடத்துவது போல நாய்க்கு வளைகாப்பு நடத்த கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்தார். இதற்காக இன்று நல்ல நாள் குறித்து பத்திரிகை அடித்தார்.
அதில் “தஞ்சாவூர், தென்றல் நகர்(நைனா) கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் வளர்ப்பு மகளான அபி(எ) அபிராமிக்கு வளைகாப்பு விழா 11-11-20 புதன்கிழமை காலை 7.45 டூ 8.45 நடைபெற உள்ளதால் அன்போடு வளர்ப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்டு சிறப்பித்திட வேண்டுகிறோம்” என்று பத்திரிகை அடித்துள்ளார்.
அதை உறவினர், அக்கம்பக்கத்தினர் என அனைவருக்கும் கொடுத்து அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் வளர்ப்பு மகளாக பாவிக்கும் அபி என்ற அபிராமி நாய்க்கு வளைகாப்பு விழா இன்று காலை உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
அவர்கள் அருகிலுள்ள கோயிலில் இருந்து வளைகாப்பு செய்வதற்காக பழங்கள் வளையல்களை ஊர்வலமாக கொண்டுவந்தனர். பின்னர் நாய்க்கு பட்டு துணி கட்டி, மாலையிட்டு, கால்களில் மஞ்சள் குங்குமம், பொட்டு வைத்து கால்களில் கர்ப்பிணிகளுக்கு அணிவிப்பதுபோல் வளையல்களை மாட்டிவிட்டு வளைகாப்பை சிறப்பாக நடத்தினர்.
இதில் அப்பகுதிமக்கள் கலந்துகொண்டனர். நாய்க்கு வளைகாப்பு செய்வதை அறிந்த பலர் வந்து நாயை பார்த்து வியந்து சென்றனர். வளைகாப்பில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது.