மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!!

மகாராஷ்டிர மாநிலம் பிவன்டி நகரில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 35 ஆக உயர்ந்தது.
மும்பை அருகே பிவன்டி நகரின் தமங்கர் நகா பகுதியில் ஜிலானி என்ற பெயரில் 3 மாடி கட்டிடம் இருந்தது. 43 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.40 மணியளவில் இக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
இதையடுத்து பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று வரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் பிவன்டி மற்றும் தானே நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் நேற்று வரை 15 குழந்தைகள் உட்பட 35 பேரின் சடலங்கள், கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து கடந்த ஆண்டிலும் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியிலும் பிவன்டி-நிஜாம்பூர் நகராட்சி சார்பில் நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டன. என்றாலும் குறைந்த வாடகை காரணமாக எவரும் வீட்டை காலி செய்யவில்லை என கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக 2 அதிகாரிகளை நகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைத்துள்ளது.
கட்டிட உரிமையாளர் சையது அகமது ஜிலானி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.