“கொள்ளையடிப்பது ஒன்றுதான் எடப்பாடி ஆட்சியின் நோக்கம்” – மு.க.ஸ்டாலின்

தமிழகம் மீட்போம் எனும் தலைப்பிலான 2021-சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்களை திராவிட முன்னேற்ற கழகம் தலைமை தொடங்கியுள்ளது. இதன்படி, இன்று நவம்பர் 1-ம் தேதி ஈரோட்டில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் சென்னையில் இருந்தப்படி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2021 மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் விரட்டியடிப்பார்கள். கொள்ளையடிப்பது ஒன்றுதான் எடப்பாடி ஆட்சியின் நோக்கம்.
கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்க விடமாட்டோம் என்று கூறிய எடப்பாடியின் ஆட்சியில் 11,000 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் விரோத அதிமுக ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுவது ஏற்புடையதல்ல. எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் கட்சியையும் நடத்த தெரியவில்லை; ஆட்சியையும் நடத்த தெரியவில்லை. ஒருவர் ஜெயலலிதா காலில் விழுந்தும் மற்றொருவர் சசிகலா காலில் விழுந்தும் பதவியை பெற்றவர்கள். பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர்கள் அல்ல.
தூத்துக்குடியில் அமைதியாக போராட்டம் நடத்திய மக்களில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது எடப்பாடி அரசு. தமிழகத்தில் கொரோனாவால் 7 லட்சம் பேர் பாதிக்கப்படவும், 11,000 பேர் உயிரிழக்கவும் காரணம் எடப்பாடி அரசு. எந்தப் பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காணாதது தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் பொதுமக்கள் உள்பட யாரும் நிம்மதியாக இல்லை. அதிமுக ஆட்சி ஏன் தொடரக்கூடாது என்பதற்கான ஏராளமான காரணங்களை என்னால் பட்டியலிட முடியும். தமிழகத்தை மீட்கும் போருக்கு அணி அணியாக திரண்டு வாருங்கள் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.