தமிழக மீனவர்கள் 4 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை மையம்!!

வங்கக்கடலின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் வறண்ட காலநிலை நிலவும்.
நவ. 21, 22-ம் தேதிகளில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 23-ம் தேதி நாகை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 24-ல் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 24-ம் தேதி வரை அரபிக் கடலின் தென் மேற்கு பகுதி, மத்திய பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.
23-ம் தேதி முதல் வங்கக்கடலின் மத்திய பகுதி, தென்மேற்கு தமிழக கரையோரத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு 4 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.