காஷ்மீரில் சுற்றுலாவை திறக்க முடிவு

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், யூனியன் பிரதேசத்தில், சுற்றுலாவை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில், பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சுற்றுலாவே உள்ளது. ஆனால், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த, 370 வது பிரிவு நீக்கம் மற்றும் சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆகஸ்டில் தொடங்கி, சுற்றுலாத்துறை கிட்டத்தட்ட ஒரு வருடமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,“ காஷ்மீர் விரைவில் சுற்றுலாவுக்கு மீண்டும் திறக்கப்படும். அரசாங்கம் விரைவில் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிடும். ”என்று அரசின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் திங்கள்கிழமை இரவு ட்வீட் செய்துள்ளார்.
இதுபற்றி, முக்கிய சுற்றுலா பகுதியான பெஹல்காம் பிராந்தியத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஹுசைன் கான் கூறியதாவது,
“இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால், கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை மீறி பொதுமக்கள் இங்கு வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனினும, மற்ற துறைகள் திறக்கும்போது சுற்றுலாத்துறை மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும். எவ்வாறாயினும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சுற்றுலா 4 ஜி இணையத்தை சார்ந்துள்ளது. அது காஷ்மீரில் தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து தகவல்தொடர்பு வழிகளையும் அடைத்துவிட்டு, எப்படி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியும்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒன்றான, ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான துலிப் தோட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.