ஒட்டிவாழ்ந்த சாதனை சகோதரர்கள் மரணம்!
உடலளவில் ஒட்டிப்பிறந்து, உலகில் நீண்டகாலம் வாழ்ந்த இரட்டை சகோதரர்கள், 68வது வயதில் மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பீவர்கிரீக் எனும் இடத்தில் கடந்த 1951ம் ஆண்டு, உடலளவில் ஒட்டிக்கொண்டிருந்த இரட்டை சகோதரர்கள் பிறந்தனர். பிறந்ததில் இருந்தே இருவரின் வயிற்றுப்பகுதியும் ஒட்டி இருந்தது. தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் இருவரையும் பிரி்த்தால் யாரேனும் ஒருவர் இறக்க நேரிடும் என்பதால், இருவரையும் அப்படியே மருத்துவர்கள் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ரோனி, டோனி கால்யன் இருவரும் நீண்டகாலமாக உடல் ஒட்டிய சகோதரர்களாவே வாழ்ந்து வந்தனர்.மேலும், உலகிலேயே நீண்டகாலம் வாழும் உடலால் ஒட்டிய இரட்டை சகோதரர்கள் எனும் பெருமையும் அவர்களை வந்தடைந்தது. தங்களின் 63வது பிறந்தநாளை கடந்த 2014ம் ஆண்டு இருவரும் இணைந்து கொண்டாடினார்கள். ரோனி, டோனி கால்யான் இருவரும் வளர்ந்தபின் பிழைப்புக்காக சர்க்கஸில் நடிப்பதும், திருவிழாக்கள், பண்டிகைகளில் வலம் வந்து, மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்ந்து வந்தனர்.
இருவரின் வருமானத்தால் தான் நீண்டகாலம் குடும்பத்தை நடந்த முடிந்தது. இரட்டை சகோதரர்கள் 1991ம் ஆண்டில் பொழுதுபோக்கிலிருந்து ஓய்வு பெற்றனர். டேட்டன் நகரில் உள்ள மக்கள் இருவரின் நிலையை அறிந்து நிதிதிரட்டி, அவர்களது வீட்டினை புதுப்பித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
இரட்டை சகோதர்கள் இருவரும் வெளியே சென்று வருவதற்காக பிரத்தியேகமாக ஒரு சக்கர வாகனத்தையும் உருவாக்கிக் கொடுத்தனர்.
இந்நிலையில் வயது முதுமை காரணமாக கடந்த 6 மாதங்களாக இருவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் கடந்த 4ம் தேதி இருவரும் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். மேலும் இறப்பு இயற்கை காரணங்களால் ஏற்பட்டது எனவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.