இந்திய- சீன எல்லை பதற்றம் முடிவுக்கு வருகிறது!

லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த பதற்ற நிலை முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15இல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்தார்கள். மேலும், எல்லையில் சீனா கூடுதல் படைகளை குவித்தது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் படைபலத்தை அதிகரித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே எல்லையில் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், எல்லையில் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. முழுமையாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை துரிதப்படுத்தி விரைவில் முடிப்பது என்று அப்போது இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இந்திய-சீன எல்லையில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ விரைவில் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதை இரு தரப்பும் உறுதி செய்வது அவசியம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது. அத்துடன், எல்லையில் அமைதியை குலைக்கும் வரையில் யாரும் தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; ஏற்கனவே உள்ள நிலையில் எந்த மாற்றமும் செய்ய முயற்சிக்கக்கூடாது; எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மதித்து நடக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்காலத்தில் எல்லையில் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க இரு தரப்பும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. படைவிலக்கல் முழுமை அடையும் வரையில் இரு தரப்பு சிறப்பு பிரதிநிதிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் இருந்து படைகளை விலக்கும் நடவடிக்கையை சீன ராணுவம் தொடங்கியது.