ஊழல் குற்றச்சாட்டால் மூன்றே நாட்களில் பதவியை இழந்த பீகாரின் புதிய கல்வி அமைச்சர்!!

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பீகாரின் புதிய கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி பொறுப்பேற்ற மூன்று நாட்களிலேயே ராஜினாமா செய்துள்ளார்.
மூன்று கட்டங்களாக நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. கடந்த திங்களன்று ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்புற்றார்.
மேலும் பாஜக சார்பில் இரண்டு துணை முதலமைச்சர்கள் உட்பட, மொத்தம் 15 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கடந்த திங்களன்று சத்தியப்பிரமாணம் முடிந்த உடனேயே, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், அமைச்சர் மேவலால் சவுத்ரிக்கு எதிரான 2017 ஊழல் குற்றச்சாட்டுகளை கிளற ஆரம்பித்தது.
பாகல்பூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது, உதவி பேராசிரியர் மற்றும் இளைய விஞ்ஞானிகள் பதவிகளுக்கான நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
அப்போதைய பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏவான மேவலால் சவுத்ரி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
தற்போது இந்த விவகாரங்களை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீண்டும் கையெலெடுத்துள்ள நிலையில், தற்போதைய அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட மேவலால் சவுத்ரி தனது பதவியை மூன்றே நாட்களில் ராஜினாமா செய்துள்ளார்.