மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை மீட்பதில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் நிவா மாவட்டத்தில், 3 வயதுக் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில், அக்குழந்தையை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நிவாடி மாவட்டத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பராபுஜுர்க் கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த கிராமத்தில் உள்ள ஹரிகிஷன் குஷ்வா என்பவர் ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார். அதன்பின், கிணற்றின் மேற்பரப்பில் இரும்பு தட்டால் மூடியுள்ளார்.
அந்த கிணற்றில் குழாய் அமைக்கும் பணிக்காக, ஊழியர்கள் வந்தபோது, அவர்கள் அந்த கிணற்றின் மேற்பரப்பிலிருந்த இரும்ப தட்டை அகற்றியுள்ளனர். அப்போது குஷ்வாஹா என்பவரின் 3 வயது மகன் பிரஹ்லாத் அதனுள் விழுந்துள்ளார்.
200 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 100 அடி அளவு தண்ணீர் உள்ளதால், குழந்தை எந்த ஆழத்தில் உள்ளார் என்பது தெரியவில்லை, எனவே மீட்பதில் சிக்கல் நீடித்து வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆழ்துளை கிணற்றில் விழுந்த அப்பாவி குழந்தையை மீட்க இராணுவத்தினரும் இணைந்து பணியாற்றுகின்றனர். அந்த குழந்தையைப் பாதுகாப்பாக வெளியே எடுங்கள். கடவுள் அக்குழந்தைக்கு நீண்ட ஆயுளுடன் ஆசீர்வாதம் வழங்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.