“தடையை மீறி யாத்திரை நடத்துவோம், கைது செய்தால், ஆர்ப்பாட்டம் வெடிக்கும்” – பா.ஜ.க எச்சரிக்கை

தமிழகத்தில், தடையை மீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால், மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், பா.ஜ., முடிவு செய்துள்ளது.
ஹிந்து மத கடவுள் முருகனை புகழ்ந்து பாடும், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய, கருப்பர் கூட்டத்தினர், அவர்களின் பின்னால் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், இன்று திருத்தணியில், வெற்றிவேல் யாத்திரையை துவக்க இருந்தார். ஆனால், யாத்திரைக்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
எனினும், திட்டமிட்டபடி யாத்திரையை துவக்க, பா.ஜ., தலைவர் முருகன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு அவர், யாத்திரையை துவக்க முயன்றால், போலீசார் கைது செய்வர். அவர் கைது செய்யப்பட்டால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த, கட்சி நிர்வாகிகளுக்கு, பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது.
யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இல்லையேல், ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.அவ்வப்போது, கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் என, கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.