“வருமானத்துக்காக டீ விக்கிறேன்…” சென்னை ஹைகோர்ட் வக்கீலின் பரிதாப நிலைமை…

சென்னை ஹைகோர்ட் வக்கீல் ஒருவர் கொரோனாவால் வேலைவாய்ப்பு இழந்து டீ விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சையது ஹாரூன் (வயது 69). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்ககுரைஞராக கடந்த 41 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
கரோனா தொற்று தாக்கம் எதிரொலி காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி சென்னையில் இருந்து அவர் சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்தார். தற்போது, வாழ்வாதாரத்திற்காக டீ விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து வக்கீல் ஹாரூன் கூறும்போது,
”நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 41 ஆண்டு காலமாக வக்கீல் தொழில் செய்து வருகிறேன். தற்போது கரோனா முடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ விற்கும் தொழிலில் ஈடுபட முடிவு செய்து இன்று முதல் டீ விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
நீதிமன்றங்கள் அனைத்தும் மூடியுள்ளன. முக்கியமான வழக்குகள் மட்டும் காணொலி காட்சிமூலம் நடந்து வருகிறது. இதனால் என்னை போன்ற வக்கீல்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு உடனடியாக நீதிமன்றங்களை அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போன்ற வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும்.
மேலும் வக்கீல்களுக்கு தலா ஒரு லட்சம் தனிநபர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் என் வீட்டில் இருந்து மூன்று கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து பல்வேறு இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து வருகிறேன்.
தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.