கூட்டுறவு வங்கிகளில் மீண்டும் கடன் வழங்க உத்தரவு!

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முதல் நகர, மத்திய – மாநில கூட்டுறவு வங்கிகளில், ஏழை, நடுத்தர மக்களுக்கும் நகைக்கடன் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடப்பதாக கூறி அவற்றை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செல்ல உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை நிறுத்த வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், எந்த கடனும் நிறுத்தப்படவில்லை என்று தமிழக முதல்வர் கூறினார்.
எனினும், கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதற்கு டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துவிதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்க அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.