“பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது” – ராகுல் குற்றச்சாட்டு

பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை என பீஹாரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்பி., ராகுல் பேசினார்.
பீஹாரில் வரும் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், நவாடா மாவட்டம் ஹிசுவாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் காங்., எம்.பி ராகுல் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: பாஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பீஹாருக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் உங்கள் பணத்தை வங்கிகளில் வைக்கவில்லை; பணக்காரர்களின் பைகளில் வைத்துள்ளீர்கள். கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராடச் சொன்னார்கள். ஆனால் அதானி போன்றோர்கள் வங்கி வரிசையில் நிற்பதை நீங்கள் பார்த்தீர்களா?
மோடி அரசு, இந்தியாவின் பணக்காரர்களுக்கு வழிவகுக்கிறது. சீன ராணுவம் நமது 20 வீரர்களை கொன்று, இந்தியாவின் 1200 கிலோமீட்டர் நிலத்தை கையகப்படுத்தியது. சீனா எங்கள் நிலத்திற்குள் ஊடுருவியபோதும், யாரும் இந்திய எல்லைக்குள் வரவில்லை என, நமது பிரதமர் வீரர்களை அவமதித்துள்ளார்.
மேலும், எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் பிரதமர் மோடி என பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் புகார் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களால் முதலில் பீகாரிலும், தொடர்ந்து நாடு முழுவதும் மண்டிகள் மூடப்படும். பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் நிலை உருவாகி உள்ளது என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.