மதிய உணவிற்காக அரசு தந்த பணத்தை பறித்த தந்தையின் மீது 10 கி.மீ. நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த 11 வயது சிறுமி!!!

மதிய உணவிற்காக அரசு வழங்கிய பணத்தை பறித்துக் கொண்ட தந்தையின் மீது 10 கி.மீ. நடந்தே சென்று மாவட்ட ஆட்சியரிடம் 11 வயது சிறுமி புகாரளித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒடிசாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கான மதிய உணவிற்கான அரிசி மற்றும் பணத்தை மாநில அரசு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் கேந்திரபாரா மாவட்டத்தின் டுகுகா கிராமத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சங்கிதா சேத்தி. மதிய உணவிற்காக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் பணத்தை தனது தந்தை வழங்க மறுப்பதாக தெரிவித்த சேத்தி அவற்றை மீட்டுத் தர வேண்டும் எனக்கோரி 10 கி.மீ நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மாவிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளித்துள்ளார்.
சேத்தியின் தாயார் 2 வருடங்களுக்கு முன் காலமானதைத் தொடர்ந்து மறுமணம் செய்து கொண்ட அவரது தந்தை சேத்தியை கவனித்துக் கொள்ள மறுப்பதால் அவர் தற்போது தனது உறவினரின் வீட்டில் வசித்து வருகிறார்..
கேந்திரபாரா ஆட்சியர் சமர்த் வர்மா கூறுகையில், “இப்போதிலிருந்து பணத்தை சேத்தியின் வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டேன். மேலும், பணத்தையும் அரிசியையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
உரிய நடவடிக்கைக்காக தனது தந்தையின் மீதே புகாரளித்த சிறுமி சேத்தியின் துணிச்சலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.