பதவிக்காக திமுகவுக்கு வந்தவன் நான் அல்ல! திமுக பொருளாளர் துரைமுருகனின் கண்டன அறிக்கை!!

.மு.கவின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவிக்கு தி.மு.க வின் பொருளாளராக இருந்த துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றார்போல் துரைமுருகன், தான் வகித்துவந்த பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.
ஆனால் அதன்பிறகு கொரோனா தாக்கம் அதிகரித்ததால், திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் நிர்வாகிகள் தேர்வும் தள்ளிப்போனது. இந்தநிலையில், பொதுச்செயலாளர் தேர்வு தள்ளிவைப்பதற்கான சட்டத்திருத்தம் தொடர்பாகவும் தி.மு.க தலைவரின் சார்பில் அறிவிப்பு வெளியானது. மேலும், பொருளாளர் பதவியில் மீண்டும் துரைமுருகனே தொடருவார் என்கிற அறிவிப்பும் வெளியானது.
தற்போது, தி.மு.க வின் பொருளாளர் பதவியில் இருந்துவரும் துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருப்பதாகவும், கு.க செல்வம் போன்று துரைமுருகனும் முக்கிய முடிவு எடுப்பார் என்றும் நாளிதழ் ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவுநாளான இன்று துரைமுருகன் குறித்த இந்த செய்தி தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு மறுப்புத் தெரிவித்து துரைமுருகன் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சட்டமன்ற உறுப்பினர் , எம்.பி பதவிகள் கிடைக்கும் என்றும் இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல. அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக, இந்த இயக்கத்துக்கு வந்தவன். நான், இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து இருவண்ணக் கொடியை பிடித்துக் கொண்டு கழகத்துக்காகக் கோஷமிட்டே கொண்டே இருப்பவன்” என்று அந்த அறிக்கையில் காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.