28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த குற்றசம்பவத்தில் பிஜேபி மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி உள்பட 32 பேர் மீது வழக்கு போடப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரிக்கிறார்.
வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து தினசரி விசாரணை நடந்தது. பாஜ மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் கடந்த ஜூலை 24ம் தேதிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்தனர். இதில் இருவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இதையடுத்து வழக்கின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிபதி எஸ்.கே.யாதவ், வழக்கை முடிக்க காலஅவகாசம் கோரினார். அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் நீதிபதி யாதவ் தீர்ப்பு விவரத்தை எழுதத் தொடங்கினார். இந்நிலையில், இந்த வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எல்கே அத்வானி, முரளிமனோகர்ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கத்தியார் உள்ளிட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.