அர்னாபிற்கு ஜாமின் வழங்க முடியாது; மறுப்பு தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம்..

ரிபப்ளிக் டிவி’யின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த மும்பை உயர்நீதிமன்றம், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட மாவட்டத்தில் உள்ள அலிபாக்கை சேர்ந்த, அன்வய் நாயக், 53, கடந்த, 2018ல், தன் தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, ‘ரிபப்ளிக் டிவி’யின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை வரும், 18ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அர்னாப் சார்பில், இடைக்கால ஜாமின் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள், எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கர்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று (நவ.,09) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை நிராகரித்தது. மேலும், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.