“டிசம்பர் மாதத்திற்கு பின் பள்ளிகளை திறக்கலாமே?” மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி!!
நீதிபதிகளே கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் சூழலில் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு மேல் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் இந்த கல்வியாண்டு வீணாகிவிடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருப்பது ஒரு சிறு ஆறுதலை அளித்து வருகிறது.
இந்நிலையில்தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் 50%க்கும் மேற்பட்ட பெற்றோர் பிற மாநிலங்களில் நடந்தவற்றை காரணம் காட்டி, பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெற்றோர்கள் பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், டிசம்பருக்கு பின்னர் ஏன் பள்ளி கல்லூரிகளை திறக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது நீதிமன்றத்தின் கருத்து தான் என்று கூறிய நீதிபதிகள், பள்ளிகளை திறந்த ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் நடந்ததை கருத்தில் கொண்டு அரசு உரிய முடிவை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு எதிரான இந்த வழக்கை நவ.20ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.