முழுக்க முழுக்க ரானுவத்துக்காகவே எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத சாலையை உருவாக்கும் இந்தியா!

இந்திய படைகளின் பாதுகாப்பிற்காக எதிரிகளால் கண்டறிய முடியாத சாலையை கூடிய விரைவில் நிறைவு செய்ய உள்ளது.
இந்தியா – சீனா இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. கல்வானில் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததை அடுத்து, சீனா உடனான எல்லைப்பகுதியில் இந்தியா கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக எல்லையில் முக்கிய சாலை ஒன்றை அமைக்கும் பணியின் பெரும்பகுதியை எல்லை சாலைகள் அமைப்பான BRO நிறைவு செய்துள்ளது. இந்த சாலை எந்த சர்வதேச எல்லைகளுக்கும் அருகில் இல்லாததால் அண்டைநாடுகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்த சாலை, பாதுகாப்புப்படையினருக்கான போக்குவரத்துக்கு பேருதவியாய் அமையும் என கூறப்படுகிறது. தற்போது 280 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எல்லை சாலைகள் பணிக்குழு தெரிவித்துள்ளது. மணலியில் இருந்து லே செல்வதற்கு 12 முதல் 14 மணிநேரம் ஆகும் நிலையில், புதிய சாலையால் பயணநேரம் 5 முதல் 6 மணிநேரமாக குறையும் என கூறப்படுகிறது.

இதற்கு முன் அமைக்கப்பட்ட இரு சாலைகள் வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், புதிய சாலை வருடம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் அமைகிறது. அதிக எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான கனரக வாகனங்கள் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 280 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த சாலையில், இன்னும் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கான பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
இந்த சாலையை எதிரிகளால் கண்டறிய முடியாது என்பதால் இந்திய படைகள் பாதுகாப்பு குறித்த எவ்வித அச்சமுமின்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.