“டிசம்பர் இறுதிக்குள் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்” அவரது அண்ணன் தகவல்!!

“நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதிக்குள் அரசியலுக்கு வருவார்,” என, அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் கெய்க்வாட், நிருபர்களிடம் கூறினார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தட்சண காசி காலபைரவர் கோவிலுக்கு நடிகர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் வருகை தந்திருந்தார். அங்கு கொரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வரவும், உலக அமைதிக்காகவும் சிறப்பு பூஜை செய்தார்.
மேலும், கோவில் நடைபாதையில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைத்து கொடுத்த மின்விளக்குகளை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா தொற்றில் இருந்து, உலக மக்கள் மீண்டு வர வேண்டியும், உலக மக்கள் நன்மை வேண்டியும், காலபைரவர் கோவிலுக்கு நேரடியாக வந்து சிறப்பு வழிபாடு நடத்தினேன்.
ரஜினிகாந்த் நீண்ட ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் பணியாற்றுவார். வரும் டிசம்பர் இறுதிக்குள் ரஜினி அரசியலுக்கு வருவார். அதை தொடர்ந்து நல்ல முடிவு தெரியும். கமல் மட்டும் அல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து மக்கள் பணியாற்றலாம். ரஜினியின் உடல் நலம் குறித்து, அடிக்கடி பேசி விசாரித்து வருகிறேன். கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார்.