போலி தங்க கட்டி தந்து ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி!!

புதையலாக கிடைத்த தங்க கட்டிகளை மலிவு விலைக்கு விற்பனை செய்கிறோம் என ஓட்டல் உரிமையாளரை ஏமாற்றிய ஆந்திர மாநில தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தென்னரசு(35). இவர் எரிச்சநத்தத்தில் ஓட்டல் வைத்துள்ளனர். கடந்த மாதம் ஆந்திராவைச் சேர்ந்த சிவசங்கர ராவ் (35) அவரது மனைவி அங்கம்மா (32) ஆகியோர் சாப்பிட வந்தனர். இவர்கள், தென்னரசிடம், தங்க புதையல் கிடைத்தது. தங்க கட்டிகளை, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளோம் எனக் கூறி உள்ளனர்.
தங்க கட்டியின் ஒரு பகுதியை கொடுத்திருக்கிறார்கள். அதனை தென்னரசு பரிசோதித்து பார்த்தார். உண்மையான தங்கமாக இருந்தது. டிச., 17ல், தங்க கட்டியை வாங்கிக்கொண்டு, அதற்கு பதிலாக, 2 சவரன் தங்க நகை, 3,000 ரூபாய் கொடுத்துள்ளார். முழு தங்க கட்டியை சோதனை செய்தபோது, போலி என தெரிந்தது.
எம்.புதுப்பட்டி போலீசாரிடம் புகாரளித்தார். விவரங்களை சேகரித்து கொண்டு போலீசார் விசாரித்து வந்தனர். அதே தம்பதி, அருப்புக்கோட்டையில், ஒரு பெண்ணிடம் இதேபோல் ஏமாற்ற முயற்சித்து சிக்கியது தெரிந்தது. அவர்களை கைது செய்து, செல்போன்கள், நகைகள், போலி தங்க கட்டி, சுத்தியல், அரிவாள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.