‘மாணவர்களை மோசமாக பாதிக்கும் மத்திய அரசின் முடிவு’: மோடிக்கு மம்தா கடிதம்

கொரோனா வைரஸ் பிரச்னையால் ஒட்டுமொத்த நாடே முடக்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி நிறுவனங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பருவத் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்துவது கட்டாயம் என, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, “கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல. அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்; முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியளிக்க வேண்டும்” என யு.ஜி.சி.,யிடம் ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், “செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதே கோரிக்கையை பிரதமருக்கு கடிதமாக எழுதியுள்ளார். அதில்,“யு.ஜி.சி.,யின் புதிய வழிகாட்டுதலுடனான கருத்து வேறுபாட்டை பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே மத்திய அரசிடம் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த விஷயத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.