‘வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்துறார்’ திமுக எம்.பி மீது பாமக புகார்!
வன்னியர் சமுதாயத்தை தொடர்ந்து இழிவு படுத்துவதாக குற்றம்சாட்டி, திமுக எம்.பி செந்தில்குமார் மீது பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில் என்கிற செந்தில்குமார் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தன்னிடம் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளிப்பவர். மக்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றி பெற்ற செந்தில்குமார், பாமக மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதனிடையே அன்புமணி ராமதாஸ் கையின் மேல் பகுதியில், அக்னி கலசம் போன்ற டாட்டூ வரைந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி கருத்து கூறிய செந்தில்குமார், “சின்ன வயசுல தடுப்பு ஊசி போட்டா சின்னதா ஒரு தழும்பு இருக்கும். இதே உங்க பெற்றோர் சின்ன வயசுல சாதி மறுப்பு, சமூக நீதி சொல்லி கொடுக்கவில்லை என்றால், மனதில் உள்ள “அசுத்தம்” இப்படித்தான் ஒருநாள் இவ்வளவு பெரிய தளும்பா வரும். இந்த சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம் மருத்துவரே” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, செந்தில்குமாரை பாமகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் எம்.பி செந்தில் மீது தமிழகம் முழுவதும் புகார் கொடுக்கச் சொல்லி பாமக தலைமையிலிருந்து நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் கட்டமாகத் தர்மபுரி சாமிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், தர்மபுரி பி1 காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாரைச் சந்தித்து, செந்தில்குமார் எம்.பி மீது புகார் அளித்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.

