தெருவில் நாயுடன் நடைப்பயிற்சி கூடாது.. மீறினால் நாய் கொல்லப்படும்!! அதிர்ச்சியில் யுன்னான் மக்கள்..
மக்கள் செல்லப்பிராணியான நாயை அழைத்துக்கொண்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை சீனாவின் யுன்னான் மாகாணம் தடை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தெருவில் மூன்று முறை நாயுடன் அதன் உரிமையாளர் பிடிபட்டுவிட்டால் மூன்றாவது முறைக்குப் பிறகு, அந்த நாய் கொல்லப்படும். இந்த நடைமுறை வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்கிற அரசின் சமீபத்திய அறிவிப்பு யுன்னான் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் உருவாக்கியிருக்கிறது.
தங்கள் உரிமையாளருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நாய்கள் தெருவில் செல்பவர்களைக் கடிப்பதாகப் புகார்கள் எழுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாண அரசு தெரிவிக்கிறது.
உரிமையாளர் தன் நாயுடன் முதல் தடவை தெருவில் பிடிபட்டால் எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால், அந்த நாட்டுப் பண மதிப்பில் ஐம்பது முதல் இருநூறு யுவான், அதாவது ஏழு முதல் முப்பது டாலர்வரை அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் இதேபோன்ற நிகழ்ந்தால் உரிமையாளரிடமிருந்து நாய் பறிமுதல் செய்யப்பட்டு கொல்லப்படும் என்று யுன்னான் மாகாணம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.