2 அங்குல உயரமான புத்தர் சிலை.. சுமார் 238 கோடி ரூபாய் மதிப்பு!!

இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலை ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலை ஒன்றை இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சிலையின் மதிப்பு இலங்கை மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 238 கோடி ரூபாய்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே இந்த சிலையை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக போலீஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, போலீஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் செயல்பட்ட நால்வரை, போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதையடுத்து, சந்தேக நபர்கள் வசமிருந்த 2 அங்குல உயரமான, மிக பழைமை வாய்ந்த நீல மாணிக்கக்கல்லில் செய்யப்பட்ட புத்தர் சிலையை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், அந்த 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மொனராகலை நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து வரும் 16ஆம் தேதி வரை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர்.