டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டால் கோவாவிற்கு வந்த சோனியா காந்தி!!

ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி, டெல்லியில் தீவிரமடைந்துள்ள காற்று மாசு காரணமாக, தற்காலிகமாக கோவாவில் தங்க முடிவு செய்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் மாசு அதிக அளவில் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து அந்நகர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். டெல்லியில் காற்றில் இருக்கவேண்டிய மாசு அளவை விட மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகமாக உள்ளது.
இதனை அடுத்து பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இருப்பினும் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருக்கும் சோனியாகாந்தி பல ஆண்டுகாலமாக ஆஸ்த்துமா நோய் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தி காற்று மாசு அதிகமாக உள்ள டெல்லியில் இருந்து வெளியேற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று டெல்லியில் இருந்து சோனியா காந்தி வெளியேறிய நிலையில் அதற்காக அவர் இன்று மதியம் கோவா தலைநகர் பனாஜி வந்தடைந்தார். அவர் சில நாட்கள் கோவாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுவாசப் பிரச்சனை காரணமாக கோவாவில் தங்கும் சோனியாகாந்தி கட்சியினர் உள்பட யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் டெல்லியின் காற்று மாசு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த பிறகு அவர் டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது