கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனால், இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவி…!

கணவன் கல்லூரி மாணவியுடன் ஓடிவிட்டதால் மன உளைச்சல் அடைந்த மனைவி இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து – ராதா தம்பதிக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் முத்து, ரத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி விஜயலட்சுமி கமலி என்பவருடன் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.
இது தெரிய வந்ததை அடுத்து கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்து, மாணவி விஜயலட்சுமியை கடத்தி சென்றுவிட்டார் என்ற தகவலை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் அசிங்கமாக பேசியதால் மனமுடைந்த ராதா, படுக்கை அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு இரண்டு மகன்கள் மீதும் தன் மீதும் மண்ணெணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
ராதா மற்றும் அவரது குழந்தைகள் அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ராதா மற்றும் இளைய மகன் அபிருத் இருவரும் முழுவதுமாக எரிந்து இறந்த நிலையில் மூத்த மகன் அபிஷேக் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தான். அவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். பின்னர் 90 சதவீத தீக்காயங்களுடன் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அபிஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
மாணவியுடன் சென்ற ராதாவின் கணவர் முத்து குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மூன்று பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த முத்துவை தேடி வருகின்றனர்.