சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல்; 14 கிளர்ச்சியாளர்கள் பலி..
சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகளும் பலர் பதுங்கியுள்ளனர்.
இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு. இந்நிலையில், சிரியாவில் உள்ள டீர் இசோர் மாகாணத்தில் உள்ள அல்பு நகரில் பதுங்கி இருந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 14 பேர் உயிரிழந்ததாக சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.