மின்கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க. ஆலோசனை!

திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், மின்கட்டண உயர்வுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, ஆலோசனை நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு காலம் என்பதால், மின்ஊழியர்களால் வீட்டுக்கு வந்து ரீடிங் எடுக்க முடியவில்லை. இந்நிலையில், எடுக்காமல் விட்ட ரீடிங்கை, மொத்தமாக 4 மாதம் கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வழக்கத்தை விட, இரண்டு, மூன்று மடங்கு மின்கட்டணம் வந்தால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த மக்கள் விரோத போக்குக்கு, எதிர்கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, புதிய மின்கட்டண முறைக்கு பதிலாக, இரண்டிரண்டு மாதமாக கணக்கிட்டு வசூலிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, மின்கட்டண உயர்வு தொடர்பாக, நாளை ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிவிப்பு:
“திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16 (நாளை), வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில், மின்கட்டண உயர்வு தொடர்பாக, ஆலோசிக்கப்படும்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.