“கரோனா பரிசோதனைகளை கிராமப்புறங்களில் அதிகரிக்க வேண்டும்” அசோக் கெலாட்

ராஜஸ்தானில் கிராமப்புறங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கரோனா கட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மாநிலத்தில் கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்தும் முதல்வர் அசோக் கெலாட் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ”மற்றப் பகுதிகளைப் போன்று கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகரிக்க வேண்டும். கிராமங்களில் கரோனா பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும். கரோனா பரவலை முழுமையாக தடுக்கும் நோக்கில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் அரசு சார்பில், தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள 8 மாவட்டங்களில் இரவில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.