கவலைப்படாதீங்க! இந்தாண்டு ஐ.பி.எல்., இருக்கு!

13-வது ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எல்., நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை நடத்த, அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது.
இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியதாவது:
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும். துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

ஐ.பி.எல்., தொடரை நடத்துவது குறித்து, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.