சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு..

சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால் குடிநீர் வினியோகம் 830 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஏரிகளுக்கான நீர் வரத்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் கண்டலேறு அணையிலும் போதிய அளவு நீர் இருப்பதால், கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் புதிதாக திறக்கப்பட்ட தேர்வாய்கண்டிகை மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளிலும் சேர்த்து தற்போது 10 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு இருப்பதால் சென்னை மாநகருக்கு வழங்கப்படும் குடிநீர் 750 மில்லியன் லிட்டரில் இருந்து 830 மில்லியன் லிட்டராக உயர்த்தி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடரும் நாட்களிலும் போதுமான மழை இருந்தால் இதே அளவு அடுத்த ஆண்டும் வினியோகம் செய்ய முடியும். தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரை தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x