மக்கள் தரையில் உருண்டு கதறி அழுததால் பரபரப்பு!!

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலசபாக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென தரையில் உருண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு மின் வினியோகம் செய்ய திருவண்ணாமலை மாவட்டம் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களிலும் உயர்மின் கோபுரம் அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறி, ஆரம்பம் முதலே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், அலங்கார மங்கலம், காம்பட்டு, அணியாலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கலசபாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஆவேசமடைந்த விவசாயிகள் தரையில் புரண்டு கதறி அழுதனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.