ரூ.20 ஆயிரத்துக்கு கிடைக்கும் கருவியை ரூ.57 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்த அதிமுக அமைச்சர்.. கைது செய்ய டி.ஆர்.பாலு  வலியுறுத்தல்!!

“தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவிகளை வாங்குவதில் முறைகேடு செய்துள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தி.மு.க எம்.பி., டி.ஆர்.பாலு  வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க பொருளாளரம், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெரு விளக்குகளைக் கண்காணிக்கும் கருவி ஒன்று சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்போது அதே கருவியை சென்னை மாநகராட்சிக்கு 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாழ்படுத்தியுள்ளார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கருவி வாங்குவதில் மட்டும் 20 கோடி ரூபாய்க்குப் பதில் 40 கோடி ரூபாயைச் செலவழித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சரும், சென்னை மாநகராட்சி கொள்முதல் அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து அதிக விலையாகக் கொடுத்த 20 கோடியை சுருட்டியுள்ளார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது என்றும், இந்தக் கருவிகள் கொள்முதல் செய்யும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதியுதவித் திட்டம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

20 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய “தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவியை” 40 கோடி ரூபாய்க்குக் கொள்முதல் செய்யும் இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதுவரை பெறப்பட்ட கருவிகளைத் திருப்பிக் கொடுத்து, இந்த கொள்முதலுக்குக் காரணமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமியை, டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமும் ஒரு ஊழல் என்று அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதை எஞ்சியிருக்கின்ற மூன்று நான்கு மாதங்களுக்காவது நிறுத்திவைக்குமாறு அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு, தானும் அந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சரை தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x